நல்ல ஹெல்மெட் - கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய தினசரிகளில் வந்த செய்தி - தலை கவசத்தை கட்டாயமாக்க ஆலோசனை!

இந்த பதிவு ஜெ.சந்திரசேகரன் அவர்கள் முன்பே இட்டுள்ளார். ஆனால் இன்னும் 10 நாட்களில் கட்டாய தலைகவசம் என்பதால் இது உதவும் என்ற எண்ணத்தில் இங்கேயும் இடுகிறேன்.


சென்னை வலை பதிவர் சந்திப்பின் போது, சில நண்பர்கள் கேட்ட கேள்வி - நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி? என்பதே!

அவர்களுக்குக் கூறிய தகவல்கள், மற்றவருக்கும் உபயோகமாய் இருக்க இப்பதிவு.

மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போனவர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!

அது - கந்தர் சஷ்டி கவசம்!

நன்றி : ஜெ.சந்திரசேகரன்


சென்னை வலைபதிவர் மாபெரும் மாநாட்டின் தகவல்கள்

சென்ற சனிக்கிழமை மாலை நாமக்கல் சிபி, தேவ், கப்பியார், J K ஆகியோர் பங்கு கொண்ட மாபெரும் வலைபதிவர் மாநாடு சென்னை பெசன்ட் நகர், கடற்கரையில் நடந்தது. சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்ததும் கிளம்பி திருமங்கலம் சென்று, அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் சிபி அலுவலகம் போய் சேர்ந்தேன். நேரில் பார்த்த்தும் இருவர்க்கும் அப்படியொரு மகிழ்ச்சி. (இருக்காதா பின்ன, ஒரே ஊர்காரங்கல்ல). அலுவலக பதிவேட்டில் கையொப்பம் வாங்கிகொண்டு அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

பின் தேநீர் அருந்தும் போது அவர் ஆரம்பித்த அலைபேசி உரையாடல்(யாருடனோ?...) நான் தேநீர் அருந்திவிட்டு தினத்தந்தி நாளிதழையும் முழுமையாக படித்த பின்பும் நீண்ண்ண்டுகொண்டேயிருந்தது. பின் எனக்கு ஒரு ஐந்து நட்சத்திர மிட்டாய் கொடுத்தார். (அதாங்க 5 star சாக்லெட்).

பிறகு இருவரும் நண்பருடைய வண்டியில் கிளம்பி, சாலையில் இடது ஓஓஓரமாகவே பெசன்ட் நகர் வந்தோம். சர்ச்சுக்கு அருகில் ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு நின்றபோது, கப்பி எதிர்பக்கம் நின்று கொண்டு அலைபேசியில் அழைத்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது தேவ் இருந்து எங்கிருக்கிறீர்கள் என்று அழைப்பு. அவரும் நின்றது எங்களுக்கு எதிர்புறம் தான். பின் நால்வரும் ஒரு சந்தில் வண்டியை நிறுத்திவிட்டு தார்சாலையை ஒட்டியுள்ள சுவர்மீது அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

எங்க பேச்சு, வ. வ. ச., மொக்க மற்றும் கும்மி பதிவு, தேவ்வின் கல்லூரி கலாட்டா என்று சுவாரஸ்யமாக சென்றது. அவ்வப்போது தேவ்க்கு திரைப்படத்திற்கு செல்லலாம் என்று நண்பரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. நாங்கள் இங்கிருக்கும் போது விழியன் அவர்கள் மெரினாவில் இருந்து அலைபேசியில் பேசினார். இந்த மாநாடு அப்படியே 8 மணி வரை தொடர்ந்த்து.

பின் எழுந்து வண்டி இருந்த இடத்திற்கு வந்து கைகுலுக்கிவிட்டு தேவ் கிளம்பிவிட்டார். பின் நாமக்கல் சிபி தனது காதல் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்படியே 8.40 வரை நின்று கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பின் நாங்களும் கைகுலுக்கிவிட்டு கிளம்பினோம். 9.15 க்கு என் அறைக்கு வந்துவிட்டு உடல் சூடாக உள்ளது என்று தனிக்க அக்கா மாலா அருந்த சென்றோம். அங்கு அண்ணன் கசிய விட்ட செய்தி அன்று அவருக்கு பிறந்த நாளாம். அப்போதுதான் புரிந்தது எனக்கு மதியம் ஏன் ஐந்து நட்சத்திர மிட்டாய் வழங்கினார் என்று. 11.30 க்கு அறைக்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றோம்.

சில சுவாரஸ்யமான சில தகவல்கள்:

1. கப்பியாரிடம் கோவி கண்ணன் சொந்த வேலையாக சென்னை வந்திருப்பதாகவும், நேரில் சந்திக்கலாம் என்றும் இந்த சந்திப்பு ஏற்படாயிற்று.

2. முதலில் கோவி கண்ணன் என்று சொல்லிக்கொண்ட நாமக்கல் சிபி, நான் அவருடைய நண்பர், நாகப்பட்டினம் என்றும் அறிமுகம் செய்து கொண்டது. கடைசியில் தான் உன்மையை கூறினோம். இது தேவ்க்கு முன்பே தெரியும்.

3. நாங்கள் பேசிகொண்டிருந்தபோது எதிரில் வந்து பார்க் செய்யப்பட்ட டிராவல்ஸ் "இண்டிகோ" காரின் உள்ளே நடந்த சென்சார் விசயங்கள்.

4. நாங்கள் சென்ற வண்டியில் "சைடு லாக்" வேலை செய்ய வில்லை. திரும்ப வந்து வண்டியை பார்க்கும் வரை, வண்டி இருக்குமோ இருக்காதோ என்ற பயத்திலேயேதான் இருந்தேன்.

5. "கைகுலுக்கிவிட்டு" என்று போட்டுள்ளது ஏன் என்றால் முக்கியமான சந்திப்புகளின் இறுதியில் கைகுலுக்க வேண்டும் என்று தேவ் கூறினார்.

இப்படி எங்களது சென்னை மாபெரும் வலைபதிவர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

பேருந்தில் நான் ஜன்னலோரம்...

ஜன்னலோர இருக்கைபேருந்தில் நான் ஜன்னலோரம்...
தழுவிச்செல்லும் தென்றல்...
முன் இருக்கையில்
குழந்தையின் சிரிப்பு...
பின் இருக்கையில்
சுவாரஸ்யமான உரையாடல்...
ரசிக்க முடியவில்லை.
மனதில் உறுத்தலாய்
நடத்துனர் கொடுக்காத
ஐம்பது பைசா சில்லரை...





பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறேன்.

ஐந்து...
பத்து...
இருபது நிமிடங்கள்

வந்த பேருந்தில்
முந்தி ஏறியதில்
ஜன்னலோர இருக்கை!
அருகில் தடியாய் ஒருவன்...

அவன் இடிக்க
நான் இடிக்க
பனிப்போரில்
எங்கள் பயணம்.

இறங்க வேண்டிய இடம்.
திரும்பிப் பார்த்துவிட்டு
இறங்கிப் போகிறேன்.

ஜன்னலோரத்தில் அமர்ந்தும்
புழுக்கமாய் மனதில்...

தோழி

நீ

எங்கிருந்தோ வருகிறாய்.

பார்த்த வழியிலேயே

உன்மேல்பாசம்கொண்டு

வருகிறேன்உன்னோடு...

வாழ்க்கையின் திருப்பத்தில்

இடறி விழுகிறேன்.

எழுந்து பார்க்கிறேன்

உன் மனதிலிருந்து...



என்

வாழ்க்கையில்

எங்கெங்கும் நீ வேண்டும்.

பயணத்தில் சக பயணியாய்

பாதையில் எதிர் வருபவராக

தோள் கொடுக்கும் தோழனாக

கொண்டாடிய தருணங்களாக

பகிர்ந்துகொண்ட சோகமாக

வாழ்வின் பரிபூரணமாய்

எங்கெங்கும்

உனைத் தேடுகிறேன்.

வேறெதுவும் இல்லாது

பிரியமான தோழியாய் மட்டுமே!...