Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

மழையோடு விளையாடி...

நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
கொளுத்தும் வெயிலில்
மழை பெய்தாலும்
நனையவும் வேண்டும் ஒரு மனம்...

'மழை வருது உள்ள போ'
அம்மாவின் குரலுக்கு பின்
வெளியே ஓடி
மண் வாசனையுடன்
முதல் துளியில் நனைந்து...

நின்ற மழையின்
வரும் வெள்ளத்தில் விளையாடி
சேரும் சகதியுமாய் திரும்பி
அம்மாவிடம் அடிவாங்கினாலும்
மழையை வெறுத்திட
நினைக்காத மனம்.


முடியாத தருணங்களிலும்
விழும் மழையை ரசித்து
மகிழ்ச்சி கொண்ட மனம்

கொளுத்தும் வெயிலில்
மழைக்காக வருத்தப்பட்டாலும்
எப்போதாவது பெய்யும் மழையிலும்
நனைந்திட துணிந்ததில்லை மனம்.

பேருந்து நிழற்குடையோ
உயர்ந்து நிற்கும் கட்டிடமோ
அலுவலக கண்ணாடி ஜன்னலோ
எங்கேனும் ஒளிந்து கொள்ளவே ஓடுகிறேன்.
நனைந்து முளைப்பதோ
ஊறி உடைவதோ
நடவாத போதிலும்
நனைய நினைப்பதில்லை மனம்.

காதலுக்காக...












மரங்கள்



யார்மீது கோபமோ
காலையிலேயே சுட்டெரிக்கும் சூரியன்.
நீண்ட சாலையில்
தனியாக நடந்துகொண்டிருக்கிறேன்.
வளர்ந்துவிட்ட
நகரத்தின் அடையாளமாய்
நடமாடும் மனித இயந்திரங்கள்
காங்கிரீட் கட்டிடங்கள்.
வாகன நெரிசலும், புகையும்...
வெகுநேரமாக சுற்றுகிறேன்
எங்கும் தென்படவில்லை
மரமெனும் மகத்துவம்
மெதுவாக புரிய ஆரம்பித்தது
சூரியனின் கோபம்.

மாறாத ஒரு புன்னகை

தவிப்போ
எவ்வித சோகமோ இல்லாமல்
இனிமையாகவே அமைந்துவிடும்
தொடக்கங்களாக
எதிர்பார்க்கிறேன்
பிரிவிலும் ஒரு புன்னகை...

உறுதியான முடிவுகளும்
பொருளுணர்ந்த பிரிவுகளும்
சூழ்நிலையில்
துயரமாகவே அமைய
கை கோர்த்து நடந்த தருணங்களையும்
பேசிச் சிரித்த பொழுதுகளையும்
நினைத்து சிரிக்க முற்படுகையில்
உனை
பார்வையிலிருந்து
மறைக்கிறது கண்ணீர்...

எல்லாம் மறைத்து
கை கொடுத்து
வழி அனுப்பும் வேளையில்
எதையோ உணர்த்த
கையில் பட்டு தெறிக்கிறது
கண்ணீர்...

நினைப்பது போல்
அமைவதில்லை வாழ்க்கை
கவிதையும் கூட...

உன் நினைவு...


ஆம்!
கொஞ்ச நாட்களாய் தான்
எந்த சூழ்நிலையில்
எப்படி இருந்தாலும்
'அந்த' பாடலை கேட்கும் போது
நீ தான்
நீ மட்டும் தான்
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறாய்...

விழுங்க முடியாத வேதனையில்
தவிக்கிறேன்
துடிக்கிறேன்.

தொலைவில் இருந்து கொண்டு
தொல்லைதான் தருகிறாய்
நினைவில்...

இம்சையாய் இருக்கின்ற போதும்
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

பாடல் முழுவதையும்
கேட்க வேண்டுமென
ஆசைதான்.
ஆனால்
முதல் வரியின் தொடக்கத்திலேயே
உன்னில் மூழ்கி
பாடலை மறக்கிறேன்.
மீண்டும் கேட்க எத்தனிக்கையில்
மீண்டும்
அதே தொடக்கம்
அதே உன் நினைவு....

முடிவு தரும் மரணம்


என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

என்னுடைய வாழ்க்கை
தேவை
தேடல் என
சுவாரஸ்யமாக இருக்கிறது.

தேவையின் அவசரம்
தேடலை முடுக்குகிறது.
கிடைத்ததன் திருப்தி
இன்றுவரை இல்லை...

அடுத்த தேடலை நோக்கியே
அவசர வாழ்க்கை...
ஆசை என்றில்லாமல்
அவசியம் என்றே
தீர்மானிக்கப்படுகின்றன
தேடல்கள் அனைத்தும்.

மனமென்ற குரங்கு
தாவிக்கொண்டே இருக்கிறது
இருப்பினும்
என்றாவது
தேடல்கள் இல்லாதிருப்பேன்.
தேவை இன்றி அல்ல...
தேவையே இல்லாமல்...

அந்த அழகிய நினைவுகள்

எங்கே மறப்பது
உன்னையும்
உன் நினைவுகளையும்...

ஞாபக முடிச்சுகள்
அவிழ்க்கப்படாமல்
இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன...

பச்சரிசி பல்வரிசையில்
பளீர் புன்னகை தானே
முதலில் வரவேற்கும்...

சிக்கல் இல்லாத
உன் நீண்ட கூந்தலில்
சிக்கிகொண்டது நானல்லவா?...

அன்று ஒரு நாள்
நீ கொடுத்த
காபியின் சுவை - என்
நுனி நாக்கில் இன்னும்...

கோவிலில்
நீ என்ன வேண்டிணாயோ?
சாமியை நோக்கி நீ நிற்க
உன்னை நோக்கி நான்...

இப்படியாய்
காதல் என்று சொல்லமுடியாத
அந்த அழகிய நினைவுகள்
வந்து கொண்டேயிருக்கின்றன
என்னுள்....

துளித்துளியாய்...

பார்க்காதே!
அவ்வாறு
என்னைப் பார்க்காதே!
நீயோ
உன் பார்வையால்
முழுவதுமாய் என்னை
அள்ளிச் செல்ல
நானோ
சிதறுண்டு போகிறேன்
துளித்துளியாய்....

தெருவோரப் பூக்கள்

யாருக்காக
எதற்காக
ஏன் பூத்திருக்கின்றன
இந்த பூக்கள்...

எங்கோ விழுந்து
ஏனோ முளைத்து
எப்படியோ வளர்ந்து
பூத்து நிற்கின்றன...

எத்தனையோ
பாதங்கள் கடந்திருக்கும்
கண்கள் பார்த்திருக்கும்
இந்த செடியை...

பார்க்காத கண்களும்
கடந்து போன பாதங்களும்
அவகாசம் கேட்கின்றன.
இந்த மலரை பார்க்கவோ?...
பறிக்கவோ?...

என்ன இது?...

உன்னை
என்னவென்று சொல்வது?...
நான் அழும்போது
என்னோடு அழுதவள்...
சிரித்தபோது
சேர்ந்து சிரித்த்வள் நீ.
எனக்காக இல்லாவிட்டாலும்
என்னோடு இருந்தவள்.
இன்றோ
எங்கிருக்கிறாயோ?
எப்படி இருக்கிறாயோ?
எல்லாம் முடிந்துவிட்டது.
இருந்தாலும்
மனம் மட்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
நாம்
சந்தித்திருக்க வேண்டாம் என்று...

பேருந்தில் நான் ஜன்னலோரம்...

ஜன்னலோர இருக்கைபேருந்தில் நான் ஜன்னலோரம்...
தழுவிச்செல்லும் தென்றல்...
முன் இருக்கையில்
குழந்தையின் சிரிப்பு...
பின் இருக்கையில்
சுவாரஸ்யமான உரையாடல்...
ரசிக்க முடியவில்லை.
மனதில் உறுத்தலாய்
நடத்துனர் கொடுக்காத
ஐம்பது பைசா சில்லரை...





பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறேன்.

ஐந்து...
பத்து...
இருபது நிமிடங்கள்

வந்த பேருந்தில்
முந்தி ஏறியதில்
ஜன்னலோர இருக்கை!
அருகில் தடியாய் ஒருவன்...

அவன் இடிக்க
நான் இடிக்க
பனிப்போரில்
எங்கள் பயணம்.

இறங்க வேண்டிய இடம்.
திரும்பிப் பார்த்துவிட்டு
இறங்கிப் போகிறேன்.

ஜன்னலோரத்தில் அமர்ந்தும்
புழுக்கமாய் மனதில்...

தோழி

நீ

எங்கிருந்தோ வருகிறாய்.

பார்த்த வழியிலேயே

உன்மேல்பாசம்கொண்டு

வருகிறேன்உன்னோடு...

வாழ்க்கையின் திருப்பத்தில்

இடறி விழுகிறேன்.

எழுந்து பார்க்கிறேன்

உன் மனதிலிருந்து...



என்

வாழ்க்கையில்

எங்கெங்கும் நீ வேண்டும்.

பயணத்தில் சக பயணியாய்

பாதையில் எதிர் வருபவராக

தோள் கொடுக்கும் தோழனாக

கொண்டாடிய தருணங்களாக

பகிர்ந்துகொண்ட சோகமாக

வாழ்வின் பரிபூரணமாய்

எங்கெங்கும்

உனைத் தேடுகிறேன்.

வேறெதுவும் இல்லாது

பிரியமான தோழியாய் மட்டுமே!...

எனக்கு பிடித்தது

என் கவிதைக்கு
எத்தனையோ
கருத்துக்கள்
விமர்சனங்கள்
மாற்றங்கள்
எல்லாம் ஏற்றுக்கொண்டு
மிகச் சிறந்ததாய்
மாற்றமும் பெறுகிறது
என் கவிதை...
ஆயினும்
எனக்கு பிடித்து
எனது பிழையான கவிதையே!...

விமர்சனம்

அடிப் பெண்ணே!
நாம் பேசி
பழகி
பரிமாறிய
வார்த்தைகளை விட
நம்மை
விமர்சித்த வார்த்தைகள்
அதிகமாகிவிட்டனவே!...

எழுத நினைத்தது

ஏனோ மனதில் குழப்பம்.
எழுத வேண்டும் என நினைத்தேன்.
என்ன எழுதுவது
எப்படி எழுதுவது
எதுவும் தெரியவில்லை.
எழுதினேன்..
எழுதியும் முடித்துவிட்டேன்.
கடைசிவரை
எழுத முடியவில்லை
நான் "எழுத நினைத்ததை"....

கவிதை

உன்னைப் பற்றி
ஏதேதோ நினைவு என்னுள்...
எங்கெங்கோ தேடி
ஏதேதோ வார்த்தைகளைக் கோர்த்து
கவிதை ஒன்று எழுதினேன்.
எழுதி முடித்ததும்
மீண்டும்
மனதில் அதே சுமை...
பின் தான் நினைத்தேன்
கவிதைக்கே
கவிதை எழுத முடியுமா என்று?...

நாம் நண்பர்களே!

உன்னை
சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
எனக்கு குழப்பமே.
நம்
உறவுக்குப் பெயர்
நட்பா? காதலா? என்று...
நீ
இல்லாத தருணத்தில்
உன் பெற்றோரின்
விசாரிப்புகளும்
தங்கையின்
புன் சிரிப்பும்
தம்பியின்
உரையாடலும்
உறுதிப்படுத்துகின்றன
நாம்
நண்பர்கள் என்று...

இந்தியா

இந்தியா,
ஜனநாயக நாடு
மக்கள் சொல்வதுதான்
எதுவுமே நடப்பதில்லை...
இருந்தாலும்
இந்தியா ஜனநாயக நாடு.

வேற்றுமை காணாத நாடு
போராடித்தான் பெறவேண்டும்
இட ஒதுக்கீடு
இருந்தபோதிலும்
இந்தியா வேற்றுமை காணாத நாடு

ஒற்றுமையான நாடு
அண்டை மாநிலத்துக்கே
தண்ணீர்தர மாட்டார்கள்
இருந்தாலும்
இந்தியா ஒற்றுமையான நாடு

பண்பாடு நிறைந்த நாடு
திருமணத்திற்கு முன்பே
உடலுறவு கொள்வோர் பலர்
இருந்தாலும்
இந்தியா பண்பாடு நிறைந்த நாடு

சாதி, மத பேதம் பார்க்காத நாடு
அரசியல் செய்ய மட்டும்
எல்லா ஜாதியும் வேண்டும்
இருந்தபோதிலும்
இந்தியா சாதி, மத பேதம் பார்க்காத நாடு

எல்லா நாடுகளிலும்
இந்தியாவை பார்த்து
கற்றுக்கொள்கிறார்களாம்.
என்ன கற்றுக்கொள்கிறார்கள்
இப்படி இருக்க வேண்டும் என்றா?
இப்படி இருக்க கூடாது என்றா?
அது தான் தெரியவில்லை....

உண்மை

நமக்கானவை
மறைக்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
கொதித்தெழுகிறேன் உண்மைகளுக்காக...
இதில்,
எனக்கானவை
கிடைக்கப்பெற்றால் கூட
ஊமையாகிப்போகிறேன்
உண்மைகளுடன் சேர்ந்து
நானும்...

நீ நல்லவனில்லை

நீ நல்லவனில்லை
என்னை மன்னித்துவிடு.
நீ
நல்லவனில்லை என்பது
எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி
நீ
என்ன நினைத்தாலும்
உண்மையை
உள்ளபடியே கூறப்போகிறேன்.

உன்னுடையதா
இந்த சமூகமா
இல்லை பருவமா
யாருடைய தவறு என்று
சரியாகத் தெரியவில்லை...

பெண்ணை
பெண்ணாக அல்லாமல்
போதையாகவும்
காமமாகவும்
பார்க்கும் கண்கள்...

பார்க்கும் நொடியிலேயே
என் முகம் தொடங்கி
செவ்விதழ்
கழுத்து
மார்பு
இடை
முழங்கால் என
பாதம் வரை மேய்ந்துவிடுகிறது
உன் கழுகுப் பார்வை...

இதில் எப்படி,
என்னை மட்டும் நீ
பெண்ணாக பார்ப்பது.

உன்னைப் பற்றி
முழுமையாக தெரியாவிட்டாலும்
இதையாவது தெரிந்துகொண்டேன்.

எனக்குத் தெரியும்
நீ நல்லவனில்லை...